டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ: இந்தியர் பராக் அகர்வால் நியமனம்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Update: 2021-11-30 02:04 GMT
வாஷிங்டன்,

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் டுவிட்டரும் ஒன்று. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், டுவிட்டர் சிஇஓ பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 

டுவிட்டரில் ஆயிரத்திற்கும் குறைவான பணியாளர்கள் இருந்த போது பணியில் சேர்ந்த பராக் கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார். 

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக பொறுப்பு வகிக்கும் இந்தியர்களான சுந்தர் பிச்சை (கூகுள்) மற்றும் சத்யா நாதெள்ளா ஆகியோரை தொடர்ந்து பராக் அகர்வாலும் முக்கிய நிறுவனமான டுவிட்டரின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்