இலங்கையில் ராணுவ பாதுகாப்புடன் பெட்ரோல், டீசல் விற்பனை

பெட்ரோல் நிலையங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Update: 2022-03-24 05:29 GMT
கொழும்பு,

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

அதே சமயம் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல், டீசலை வாங்கிச் செல்கின்றனர். 

இதனிடையே பெட்ரோல் வாங்க நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்த 2 நபர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். இது போன்ற சம்பவங்கள் மேற்கொண்டு நிகழாதபடி தடுக்கவும், பெட்ரோல் வாங்கிச் செல்பவர்களின் பாதுகாப்பிற்காகவும் பெட்ரோல் நிலையங்களில் ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் நிலையங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கவும் இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

மேலும் செய்திகள்