பாக். பிரதமர் பதவியில் நீடிப்பாரா இம்ரான்கான்? - நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நேரம் அறிவிப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர்,
பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 172 இடங்களை கைப்பற்றியிருக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் கட்சி 155 இடங்களை கைப்பற்றியது. மேலும், 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 179 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான்கான் ஆட்சியமைத்தார்.
இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் இம்ரான்கானின் உறுப்பினர்கள் பலம் 164 ஆக குறைந்ததுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இம்ரான்கானின் அரசு கவிழ்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில், இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது கடந்த 31-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது 3- ம் தேதி (நாளை) வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இம்ரான்கான் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை எப்போது நடைபெறும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை காலை 11.30 மணிக்கு இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் 172 உறுப்பினர்களில் ஆதரவை பெறவில்லை என்றால் இம்ரான்கானின் அரசு கவிழும். முன்னதாக, தனது அரசை கவிழ்க்க வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான்கான் குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.