டுவிட்டர் ஊழியர்கள் அதிகமான பணிச்சுமையை சந்திக்க நேரிடும்- எலான் மஸ்க் எச்சரிக்கை

எலான் மஸ்கின் எச்சரிக்கை டுவிட்டர் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-05-08 14:35 GMT
Image Courtesy : AFP
நியூயார்க்,

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார்.

அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக அவர் ஒப்பந்தம் செய்த முழுத்தொகையை செலுத்திய பின்னர் அவர் நிறுவனத்தின் முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்வார் என தெரிகிறது. இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை கையப்படுத்திய பிறகு நிறுவனத்தில் நடக்கவுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து அவர் டுவீட் செய்துள்ளார். 

இது குறித்து அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " இனி டுவிட்டர் நிறுவனம் ஹார்ட்கோர் மென்பொருள் பொறியியல், வடிவமைப்பு, இன்ஃபோசெக் மற்றும் சர்வர் ஹார்டுவேர் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும். 

தொழில்நுட்ப துறையில் உள்ள அனைத்து மேலாளர்களும் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நிறுவனத்தை வெற்றியடையச் செய்ய ஊழியர்களை இன்னும் கடினமாக உழைக்க செய்வேன் . மேலும் பணி நெறிமுறை எதிர்பார்ப்புகள் தீவிரமானதாக இருக்கும்" என அவர் பதிவிட்டுள்ளார்.

மஸ்கின் இந்த எச்சரிக்கை டுவிட்டர் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் செய்திகள்