லெபனானில் இருந்து ஊடுருவ முயற்சி; பயங்கரவாத குழுவை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் படை

லெபனானில் இருந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாத குழுவை இஸ்ரேல் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியுள்ளது.

Update: 2023-10-17 10:27 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆயுத உதவி போன்றவற்றை செய்து வருகின்றன.

இஸ்ரேல் மீது நடந்த ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பதிலடியாக, 11-வது நாளாக வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்கி வருகிறோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், லெபனான் நாட்டில் இருந்து பயங்கரவாத பிரிவை சேர்ந்த குழு ஒன்று இஸ்ரேலுக்குள் ஊடுருவி, வெடிகுண்டை வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.  இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அந்த முயற்சியை முறியடித்தனர். இதன்பின்னர் பயங்கரவாதிகள் 4 பேரை சுட்டு கொன்றனர் என எக்ஸ் சமூக ஊடகத்தில் படையினர் இன்று தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, லெபனானின் எல்லை பகுதியில் மெதுலா என்ற இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தும் சத்தம் கேட்டது என தெரிவித்த இஸ்ரேல் விமான படை, லெபனானில் உள்ள ஹிஜ்புல்லா அமைப்பின் பயங்கரவாத இலக்குகள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்பை தாக்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹமாஸ் அமைப்பின் 200 ராணுவ உட்கட்டமைப்புகள் நேற்று தாக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பயங்கரவாத சுரங்க பகுதிகள் மற்றும் காசா முனை பகுதியில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ய ஹமாஸ் பயன்படுத்திய வங்கி ஒன்றையும், இஸ்ரேல் படைகள் இலக்காக கொண்டு தாக்கி அழித்தன என்றும் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்