உலகை அச்சுறுத்துவதற்காக ரஷியா தாக்குதல் - உணவு, விவசாய இலக்குகள் அழிப்பு
உலகை அச்சுறுத்துவதற்காக உக்ரைனிலுள்ள உணவு மற்றும் விவசாய இலக்குகளை ரஷியா தாக்கி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
image courtesy: AFP
கீவ்,
உலகை அச்சுறுத்துவதற்காக உக்ரைனிலுள்ள உணவு மற்றும் விவசாய இலக்குகளை ரஷியா தாக்கி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷியாவின் விதிமுறைகளின்படி கருங்கடலை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ள ரஷியா இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் மிகப்பெரிய விவசாயப்பொருட்கள் முனையங்களை கடந்த வாரத்தில் ரஷியப்படைகள் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், உலகளாவிய உணவு பற்றாக்குறையை மிகப்பெரும் பேரழிவாக காட்ட ரஷியா விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன்-ரஷியா போரால், உணவு பாதுகாப்பு, ஆற்றல், எரிசக்தி மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து உலகளாவிய நெருக்கடி பதில் குழு நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் உக்ரைனில் நடந்த போரால் 94 நாடுகளில் குறைந்தது 1.6 பில்லியன் மக்கள் நிதி, உணவு அல்லது எரிசக்தி ஆகியவற்றுள் ஏதாவது ஒரு துறையில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023-ல் பெரும் உணவு நெருக்கடி ஏற்படும் எனவும், அதைத் தடுக்க நம்மிடம் "நேரம் குறைவாக" உள்ளதாகவும் அந்த ஐ.நா அறிக்கை எச்சரிக்கிறது.