ஏப்ரல் 21–ந் தேதி சித்திரை திருவிழா தொடக்கம்: தஞ்சை பெரியகோவிலில் பந்தல்கால் நடும்விழா

தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

Update: 2017-02-06 23:00 GMT

தஞ்சாவூர்,

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 21–ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் மே மாதம் 8–ந் தேதி(திங்கட்கிழமை) வரை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் பந்தல்கால் நடும்விழா நேற்று நடந்தது. விழாவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர்கள் மாதவன், சுரேஷ், கோவில் மேற்பார்வையாளர் அசோகன் மற்றும் அதிகாரிகள், கோவில் குருக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஞானமணி குருக்கள் கூறியதாவது:–

வருகிற 13–ந் தேதி(திங்கட்கிழமை) அய்யனாருக்கு காப்பு திருவிழா தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன்கோவிலிலும், தெற்குவீதியில் உள்ள காளியம்மன்கோவிலிலும் விழா நடைபெறும். அதன்பின்னர் தான் பெரியகோவிலில் சித்திரை திருவிழா தொடங்கும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 21–ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. மே மாதம் 5–ந் தேதி(வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்