இரவில் வந்து உணவருந்தும் கிருஷ்ணர்

இந்த உலகமே இயற்கை என்னும் அதிசயங்களால் கட்டமைக்கப்பட்டது தான். இந்த கலகத்திற்குள் தான் நம்மை வியப்பில் ஆழ்த்தும், அதிசயங்களும், ஆச்சரியங்களும் எத்தனை.. எத்தனை இருக்கின்றன! அப்படியொரு அதிசய நிகழ்வைத் தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா?..

Update: 2018-02-13 08:11 GMT
காட்டிற்குள் அமைந்த ஒரு ஆலயத்திற்கு கிருஷ்ணரும், ராதையும் இரவு நேரங்களில் வந்து உணவருந்திவிட்டுச் செல்லும் அதிசய நிகழ்வுதான் அது. சரி.. வாருங்கள்.. விஷயம் என்னவென்று பார்ப்போம்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் அமைந்த ஊர் தான் பிருந்தாவனம். கண்ணன் சிறுவயதில் ஆடிப்பாடி விளையாடிய இடம் என்றும், கோபியர்களோடு மகிழ்ந்து இருந்த இடம் என்றும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த பிருந்தாவனம் பகுதியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் நிறைந்துள்ளன.

அவற்றுள் மிக முக்கியமானது, இங்குள்ள நிதிவனம் என்ற காட்டிற்குள் அமைந்துள்ள ரங் மகால் என்னும் ஆலயம். இந்தக் கோவிலும், இந்தக் கோவில் இருக்கும் இடமான நிதிவனமும் பல அற்புதங் களையும், அமானுஷ்யங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கின்றன.

இந்த நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதானது. ஆனாலும் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் பசுமையுடன், செழிப்பாக காணப் படுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.

மேலும் இந்தக் காட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வளைந்தே காணப்படுகிறது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும்.

மேலும் இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருவது மற்றொரு ஆச்சரியமாகும். இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என நம்பப்படுகிறது.

இந்தக் கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது. அந்தக் கட்டிலுக்கு அருகில் ஒரு கலசத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், கிருஷ்ணர் போட்டுக்கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது.

இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள், பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தக் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். பகலில் இந்த காட்டுப்பகுதியில் தென்படும் விலங்குகளும், பறவைகளும் கூட, இரவு வேளையில் ஆலயம் இருக்கும் திசை பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை என்பது ஆச்சரியப்படுத்தும் தகவலாகும்.

ஒவ்வொரு நாளும் இந்த கோவிலை திறக்கும்போதும் கட்டில் அருகில் தண்ணீரும் உணவும் துளி அளவு கூட சிந்தாமல் சிதறாமல் உண்ணப்பட்டு இருப்பது, இன்றுவரை நடந்துவரும் அதிசய நிகழ்வாகும்.

இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்தக் கோவிலுக்கு வருவதாகவும், அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் நம்பப் படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்தக் காட்டிற்குள் இரவு வேளையில் மக்கள் யாரும் அனுமதிக்கப் படுவதில்லை என்கிறார்கள்.

மேலும் செய்திகள்