இறைவனை அறிவதில் இப்ராகிம் நபியின் தேடல்

இப்ராகிம் நபிகள் தங்கள் இளமைகாலம் தொட்டே மிகவும் முற்போக்கு சிந்தனையாளராக விளங்கினார். அவரது தந்தை ஆஜர் என்பவர் கடவுள் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார்.

Update: 2018-06-20 07:43 GMT
இளம் வயதிலேயே இப்ராகிம் நபிகள் இதுகுறித்து தன் தந்தையிடம் இவ்வாறு கேள்விகள் கேட்டார்.

“தந்தையே, நீங்கள் உருவாக்கும் ஒரு சிலையை கடவுள் என்று சொல்லி மக்களை நம்ப வைக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் தான் கடவுள்களை படைக்கின்றீர்களா? அப்படியிருந்தும் அவை சில சமயங்களில் உடைந்து சிதறி விடுகின்றன. தன்னையே உடையாமல் காத்துக்கொள்ள முடியாத இந்த சிலைகள் உலகையும், உலகளாவிய உயிர்களையும் காக்கும் என்று நம்புவது எப்படி அறிவிற்கு பொருத்தமானதாக இருக்க முடியும்?”.

இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இப்ராகிம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி, ‘நீர் சிலைகளை தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா? என்று கேட்டு, நிச்சயமாக நீரும் உம்முடைய மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கிறேன்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 6:74)

தந்தையிடம் கேள்வி கேட்டவர் மனதில் இறைவனைப் பற்றிய தேடல் அதிகரித்தது. அந்த காலத்தில் மக்கள் எவற்றை எல்லாம் கடவுளாக வணங்கினார்களோ, அவைகள் அனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆசை அவரது உள்ளத்தில் தோன்றியது. இதையடுத்து நட்சத்திரம், நிலவு, சூரியன் ஆகியவை கடவுளாக இருக்குமா? என்று அவர் தேடினார். இதை திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது:

“ஒரு நாள் இருள் சூழ்ந்த இரவில் அவர் மின்னிக்கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டு ‘இது என் இறைவன் ஆகுமா?’ என தம் மக்களைக் கேட்டு, அது மறையவே, மறையக் கூடியவற்றை இறைவனாக எடுத்துக் கொள்ள நான் விரும்ப மாட்டேன்” எனக் கூறிவிட்டார். (திருக்குர்ஆன் 6:76)

“பின்னர் உதயமான சந்திரனைக் காணவே, ‘இது என் இறைவன் ஆகுமா?’ எனக்கேட்டு அதுவும் அஸ்தமித்து மறையவே அதையும் நிராகரித்து விட்டு, எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகி விடுவேன்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 6:77)

“பின்னர் உதயமான பளிச்சென்று நன்கு ஒளிரும் சூரியனைக் கண்ட போது, ‘இது மிக பெரிதாக இருக்கிறது. இது என் இறைவன் ஆகுமா?’ எனக்கேட்டு அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் தம் மக்களை நோக்கி, ‘என் மக்களே நீங்கள் இறைவனுக்கு இணையாக்கும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து ஒதுங்கி விட்டேன்’ என்று கூறினார்”. (திருக்குர்ஆன் 6:78)

சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவை எல்லாம் கடவுளாக இருக்கமுடியாது என்றால், யார் இறைவனாக இருக்கமுடியும் என்ற மெய்ப்பொருளை அறிவதில் அவரது ஆர்வம் தொடர்ந்தது. தன் சக்திக்கும் அப்பாற்பட்ட அந்த பரம்பொருளை அறிந்து கொள்வதற்கு அதனிடமே உதவியையும் தேடினார். அப்போது அவர் உணர்ந்துகொண்டதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“வானங்களையும், பூமியையும் எவன் படைத்தானோ அந்த ஒருவனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகிறேன். நான் அவனுக்கு எதையும் இணை வைப்பவன் அல்ல” என்று கூறினார். (திருக்குர்ஆன் 6:79)

இப்ராகிம் நபிகள், இறைவன் யார் என்ற தேடலில் இறுதி இலக்கை அடைந்த போது, ‘இந்த உலகை படைத்து பரிபாலனம் செய்யக்கூடிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். தனது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் மட்டுமே’ என்று அவர் முடிவுக்கு வந்தார். அல்லாஹ்வும் அவரை தனது தூதராக ஏற்றுக்கொண்டு அவருக்கு இறைச்செய்தியை அளித்தான்.

என்றைக்கு இறைவனைப் பற்றிய ஞானம் ஏற்பட்டு விட்டதோ, அன்றிலிருந்து தன் தந்தை உள்ளிட்ட அத்தனை மக்களையும் அறியாமையில் இருந்து விடுவித்து அல்லாஹ்வின் பாதையில் திருப்ப முயற்சிகள் பல செய்தார். இதனால் அவர் கடும் எதிர்ப்புகளை சந்தித்தார். இருந்தாலும் அவர் இறைச்சேவையை நிறுத்தி விடவில்லை.

ஒரு முறை அந்த மக்கள் மத்தியில் ஒரு திருவிழா வந்தது. ஊரின் வெளியே இருந்த கடவுளை வணங்கி வழிபட மக்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

அப்போது, இப்ராகிம் நபிகள் ‘கஅபா’ ஆலயத்தில் உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மண் சிலைகளை தன் கோடாரியால் உடைத்து நொறுக்கினார். பின்னர் அங்கிருந்த ஒரு சிலையின் தோளில் தன் கோடாரியை மாட்டி விட்டு எதுவும் அறியாதவர் போல் சென்று விட்டார்.

ஊர் திரும்பிய மக்கள், தங்களுடைய ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து ஆத்திரம் கொண்டனர். இப்ராகிம் நபிகள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.

இதற்கு இப்ராகிம் நபிகள், “அதோ கோடாரியை தன் தோளில் மாட்டியிருக்கும் உங்கள் கடவுளிடம் கேளுங்கள். கோடாரியை கையில் வைத்திருப்பதால் ஒரு வேளை அதுதான் கோபமுற்று தன் தோழர்களை உடைத்திருக்குமோ என்று விசாரியுங்கள்” என்றார்.

அதற்கு மக்கள், “சிலைகள் எவ்வாறு பேசும். எங்களை நீர் திசை திருப்புகிறீர்” என்றார்கள்.

உடனே இப்ராகிம் நபிகள், ‘தன்னால் பேசவோ, தன்னை ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ளவோ சக்தியற்ற இந்த சிலைகளை விட நீங்கள் மேலானவர்கள் அல்லவா?. உங்களால் பேச முடியும். உங்களைத் தற்காத்து கொள்ளவும் முடியும். அப்படி இருக்கும் போது இச்சிலைகளை உங்களைக் காக்கும் கடவுளர்களாக நீங்கள் வணங்குவது சரியானதாக இருக்க முடியுமா? யோசியுங்கள். நம்மையும், இந்த சிலையையும் படைத்த ஏக இறைவனையே வணங்குங்கள்’ என்றார்.

அவரின் பதிலால் வெட்கித்தலைகுனிந்தாலும் இதை ஏற்க மக்கள் தயாராக இல்லை. ‘இவர் தன் வாதத்திறமையால் நம் தெய்வங்களையே குறை கூறுகிறார். நம் கடவுள்களுக்கு தீமை செய்த இவரை அரசரின் முன் நிறுத்தி, தீயிலிட்டு பொசுக்க வேண்டும்’ என்று அந்த மக்களும், மக்கள் தலைவர்களும் கூறினார்கள். இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“அதற்கவர்கள் தங்கள் மக்களை நோக்கி, நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றிருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழிவாங்குங்கள்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 21:68)

அவர்களின் திட்டப்படியே இப்ராகிம் நபிகள் தீயில் எறியப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருளால் இப்ராகிம் நபிகள் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் திருக்குர்ஆனில் வரலாறு ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

யார் ஒருவர் ஏக இறைவன் மீது உறுதிகொண்டு, அவனையே முற்றிலும் சார்ந்து இருந்து, அவனையே வணங்கி வந்தால் அவருக்கு வரும் சோதனைகள் எல்லாம் நொடியில் விலகிவிடும் என்பதையும், அவர்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றவர்களாக மாறிவிடுவார்கள் என்பதையும் இப்ராகிம் நபிகள் சரித்திரத்தின் மூலம் நாம் அறியலாம்.

(தொடரும்)

மேலும் செய்திகள்