பழைய சீவரம் செல்லும் வரதராஜர்

காஞ்சிபுரத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், வாலாஜாபாத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, பழைய சீவரம் என்ற ஊர். இங்கு மலை மீது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் இருக்கிறது.

Update: 2019-08-06 10:54 GMT
காஞ்சிபுரம் அத்தி வரதர், குளத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டதை அடுத்து, இறைவனின் அருள்வாக்குப்படி, அத்தி வரதரின் பிரதி பிம்பம் போலவே இந்த ஆலயத்தில் இருந்த பெருமாளைத் தான், தற்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் மூலவராக பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

இதை நினைவுபடுத்தும் விதமாகத்தான், ஆண்டிற்கு ஒரு முறை, தை மாதம் 2-ம் நாள், காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள், பாரிவேட்டை உற்சவமாக பழைய சீவரம் சென்று வருகிறார். 

பாலாற்றின் கரையில் உள்ள இந்த இடத்திற்குச் செல்ல முதல் நாள் இரவு 10 மணி அளவில் காஞ்சியில் இருந்து புறப்படுகிறார் வரதராஜப் பெருமாள். மறுநாள் (தை 2-ம் நாள்) பழைய சீவரம் மலை மீது எழுந்தருள்கிறார். அங்கு பகல் முழுவதும் இருந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து விட்டு, மாலை நேரத்தில் மலையில் இருந்து இறங்கி இரவு 10 மணி அளவில் காஞ்சிபுரம் புறப்பட்டு, மறுநாள் காலையில் ஆலயம் வந்தடைகிறார். 

மேலும் செய்திகள்