பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வார விடுமுறை காரணமாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-06-19 16:40 GMT

தமிழகத்தின் சிறந்த ஆன்மிக தலமாகவும், முருகப்பெருமானின் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறையான  பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

குறிப்பாக மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின்இழுவை ரெயில்நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்