திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறுகிறது.

Update: 2024-04-11 07:42 GMT

திருவட்டார்,

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் 87-வது திவ்யதேசம் ஆகும். இத்தலத்தில் திருமாலின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16,008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவானது.இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்தநிலையில்,திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் நடைபெறுகிறது.

பங்குனித்திருவிழாவின் முதல் நாளான நாளை ஏப்ரல் 12. ந் தேதி காலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், காலை 8.45லிருந்து 9.30 மணிக்குள் பஞ்சவாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்று, மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.

2.ம் நாள் (13.ந்தேதி) காலை 8 மணிக்கு நவநீத நாராயணீய சமிதி வழங்கும் நாராயண பாராயணம், இரவு 7 மணிக்கு டான்ஸ், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், , 3.ம் நாள் (14.ந்தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 7.45 மணிக்கு நடனம்,இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், நான்காம் நாள் (15.ந்தேதி) காலை 8 .மணிக்கு பாகவத பாராயணம், இரவு மணிக்கு சங்கீத கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல், 5.ம் நாள் (16. ந்தேதி) இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று, தொடர்ந்து கருடவாகனத்தில் சுவாமி பவனி வருதல், 6.ம் நாள் (17. ந்தேதி) இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 7.15 மணிக்கு சங்கீத கச்சேரி, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல்,

7.ம் நாள் (18. ந் தேதி)காலை 8 மணிக்கு பாகவத பாராயணம் காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 7.15மணிக்கு ஆதிகேசவனும் அனந்த பத்மநாபனும் என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு நாட்டியாஞ்சலி, இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.

8.ம் நாள் (19. ந் தேதி) இரவு 7 மணிக்கு டான்ஸ், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ,9.ம் நாள் ( ஏப்ரல் 20ந்தேதி) இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை க்கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், 10. நாள்( ஏப்ரல் 21ந் தேதி) காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல், கழுவன் திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச்சென்று மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு நிகழ்ச்சி, ஆறாட்டு முடிந்து கோவிலுக்கு சுவாமி திரும்புதல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது. தினமும் இரவு 10 மணிக்கு கதகளி நடக்கிறது.

முன்னதாக இன்று(11.ந்தேதி) மாலை 4.30 மணிக்கு கொடியேற்றுவதற்குரிய கொடிக்கயிறு ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மாலை தீபாராதனைக்கு முன்னதாக ஆதிகேசவப்பெருமாள் கோவில் கருவறையில் சமர்பிக்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்