வடபழனி கோவில் 7-ம் நாள் நவராத்திரி திருவிழா: கம்பாந்தி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்

வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2022-10-03 03:16 GMT

சென்னை:

வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி, 7-ம் நாளான நேற்று, கம்பாந்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

சக்தி கொலு 7-ம் நாள் விழாவை ரங்கவள்ளி ஆர்ட்ஸ் பவுன்டேஷனை சேர்ந்தவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் லலிதா சகஸ்ரநா பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது. பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.

மேலும், காலை 7.30 முதல் 12.30 மணி வரையும் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையும் மீனாட்சி அம்மனுக்கும், உற்சவருக்கும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இது தவிர இரவு, வித்யாவாணி சங்கீத வித்யாலயா குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. மேலும், குழந்தைளுடன் வந்த பெற்றோருக்கு 10 கேள்விகள் அடங்கிய தாள் வழங்கப்பட்டு, சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

7-ம் நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்