முதல்-அமைச்சரின் பதில் உரை ஒரு மதிப்பீடு அட்டை

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பின் சட்டசபையில், முதல் கவர்னர் உரையை கடந்த 5-ந்தேதி ஆற்றினார்.

Update: 2022-01-09 20:05 GMT
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பின் சட்டசபையில், முதல் கவர்னர் உரையை கடந்த 5-ந்தேதி ஆற்றினார். இந்த கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடந்த விவாதத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் பேசிய பிறகு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை அளித்தார். சட்டசபையில் கவர்னர் உரையில் நிறைய அறிவிப்புகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் கவர்னர் உரை என்பது அரசின் கொள்கைகள், அரசு செல்லப்போகும் பாதை ஆகியவற்றை கோடிட்டு காட்டுவதாகத்தான் இருக்கும். இதைத்தான் மறைந்த பேரறிஞர் அண்ணா 6-5-1957-ம் ஆண்டே கவர்னர் உரை என்றால் என்ன? என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டு சென்று இருக்கிறார். ‘’பொதுவாக ஆட்சியாளர்களுடைய கொள்கைத் திட்டங்களை விளக்குவதே கவர்னருடைய பேருரை என்பதும், அந்த கொள்கை திட்டங்களுக்கு ஏற்ப நிதியை பகுந்தளிப்பதாகிய புள்ளி விவரங்களை கொண்டதே வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) என்பதும்தான், நான் அறிந்துள்ள வரையில் உணர்ந்து இருக்கிறேன்’’ என்று கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அண்ணா வழியில் இந்த பதில் உரையில் பல விளக்கங்களை அளித்து இருக்கிறார். தன் உரையை, கடந்த மே மாதம் 7-ந்தேதியில் இருந்து அவருடைய தலைமையிலான அரசு ஆற்றிய பணிகளின் ‘ரிப்போர்ட் கார்டு’ என்று சொல்லப்படும் மதிப்பீடு அட்டையாக வெளிக்காட்டி உள்ளார். இதுவரை அவர் தலைமையிலான அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, விதி எண் 110-ன் கீழான அறிவிப்பு உள்ளிட்டவை பல்வேறு தருணங்களில் இந்த 8 மாதங்களில் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதாவது, வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 75 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 24 சதவீத அறிவிப்புகள், அதாவது 389 அறிவிப்புகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன. 1 சதவீத அறிவிப்புகள் அதாவது, 14 அறிவிப்புகள் மட்டும் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளன. இப்படி அறிவிப்புகளை, அதனை செயல்படுத்தும் விதத்தை வெளிப்படையாக அறிவித்து ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் கொடுக்கும் அரசாக இந்த அரசு விளங்குகிறது என்று மிகப் பெருமையோடு கூறினார். இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு அம்சம் ஆகும்.

வெறுமனே அறிவிப்புகளை மட்டும் சொல்லிவிட்டு அது நிறைவேறியதா?, நிறைவேறவில்லையா? அதன் நிலை என்ன ஆனது? என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்து விடுவதை தவிர்க்க இத்தனை அறிவிப்புகளை வெளியிட்டோம், இத்தனை அறிவிப்புகளை நிறைவேற்றினோம் என்று சொல்வது நல்ல முன் உதாரணமாக இருக்கிறது. அது போல தேர்தலில் வெற்றி பெற்ற நாளில் இருந்து ‘இது எங்களுடைய அரசு அல்ல. நம்முடைய அரசு. உங்களுடைய அரசு’ என்று சொல்லி வரும் மு.க.ஸ்டாலின், இந்த பதில் உரையின் போது கூட, எதிர்க்கட்சியினரை நோக்கி, ‘நாங்கள் இந்த பக்கம், நீங்கள் அந்த பக்கம் என்று ஒரு அடையாளத்துக்காக தான் உட்கார்ந்து இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து மக்களின் பக்கம்தான் என்பதை மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் எதிர்கால தமிழகத்தை ஒளிமயமாக்குவோம்’ என்று கூறியது நிச்சயமாக பாராட்டுக்குரியது. தேர்தல் அறிக்கையில் சொன்னதை மட்டும் அல்ல. சொல்லாதவைகளான ‘இல்லம் தேடி கல்வி’, ‘மக்களை தேடி மருத்துவம்’, ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம்’ போன்ற திட்டங்களை நிறைவேற்றி இருப்பதையும் எடுத்துக்கூறினார். மொத்தத்தில் முதல்-அமைச்சரின் பதில் உரை அரசின் செயல்பாடுகளை மக்கள் மதிப்பீடு செய்வதற்கு, உகந்த வழியில் ஒரு சாதனை விளக்க உரையாக அமைந்திருந்தது.

மேலும் செய்திகள்