துபாயில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் தங்கள் அணி தோற்க 7 வீரர்கள் தொடர் ரன் அவுட் ஐசிசி விசாரணை

துபாயில் நடைபெற்ற அஜ்மன் ஆல் ஸ்டார் லீக் போட்டியில் வீரர்கள் தங்கள் அணியை தோற்கடிப்பதற்காக வேண்டுமென்றே அவுட் ஆன வீடியோ வைரலானதை தொடர்ந்து ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது.

Update: 2018-01-31 09:22 GMT
ரியாத்

ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சங்கம் சார்பாக அஜ்மன் ஆல் ஸ்டார் லீக் கிரிக்கெட் தொடர் அஜ்மன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்திருந்து. ஆனால் போட்டி தொடங்கிய இரண்டு நாட்களில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. துபாய் ஸ்டார்ஸ் மற்றும் சார்ஜா வாரியர்ஸ் அணி இடையிலான 20 ஓவர் போட்டியின் போது வீரர்கள் வேண்டுமென்றே அவுட் ஆகினர். வாரியர்ஸ் அணிக்கு 136 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணி வீரர்கள் தொடர்ச்சியாக ரன் அவுட் ஆகினர். இதனால் 46 ரன்களில் அந்த அணி சுருண்டது. 7 வீரர்கள் தங்கள் அணி தோற்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரன் அவுட் ஆனதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இது குறித்து ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளதாக அதன் தலைவர் அலெக்ஸ் மார்ஷல் கூறியுள்ளார். வீரர்கள் வேண்டுமென்றே அவுட் ஆகும் வீடியோ பதிவை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்