ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 197 ரன்கள் குவிப்பு

கிறிஸ் கெயில், மயன்க் அகர்வால் மற்றும் கருண் நாயரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணிக்கு 198 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. #KXIPvCSK #IPL

Update: 2018-04-15 16:43 GMT
மொஹாலி,

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.   இதில் சென்னை, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 8 வது ஓவரில் 96 ரன்களை குவித்த இந்த ஜோடி ஹர்பஜன் பந்து வீச்சில் பிரிந்தது. லோகேஷ் ராகுல் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் சிங்கின் சுழல் பந்து வீச்சில் பிராவோ விடம் கேட்ச ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடி வந்த கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் (7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) எடுத்து வாட்சன் பந்தில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய வீரர்களும் சற்று அதிரடி ஆட்டத்தில் ஈடுபட பஞ்சாப் அணியின் ரன் வேகம் எகிறியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்