உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டர்சி ஷார்ட் 257 ரன்கள் குவித்து சாதனை

ஆஸ்திரேலியாவில் ஜே.எல்.டி. கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

Update: 2018-09-28 21:30 GMT

சிட்னி, 

ஆஸ்திரேலியாவில் ஜே.எல்.டி. கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சிட்னியில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் குயின்ஸ்லாந்துக்கு எதிராக விளையாடிய மேற்கு ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 47 ஓவர்களில் 387 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. மேற்கு ஆஸ்திரேலிய அணியில் 2–வது விக்கெட்டுக்கு இறங்கிய டர்சி ஷார்ட் 257 ரன்கள் (148 பந்து, 15 பவுண்டரி, 23 சிக்சர்) விளாசி பிரமாதப்படுத்தினார். ‘லிஸ்ட் ஏ’ வகை ஒரு நாள் கிரிக்கெட்டில் (சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை சேர்த்து) 3–வது தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்தை சேர்ந்த அலி பிரவுன் 2002–ம் ஆண்டு லண்டனில் நடந்த கவுண்டி அணியான கிளாமோர்கனுக்கு எதிரான ஆட்டத்தில் சுர்ரே அணிக்காக 268 ரன்கள் எடுத்ததே சாதனையாக நீடிக்கிறது. இந்திய வீரர் ரோகித் சர்மா 2014–ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்து 2–வது இடத்தில் இருக்கிறார்.

லிஸ்ட் ஏ வகை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெற்று இருக்கும் டர்சி ஷார்ட், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய நியூசிலாந்தின் காலின் முன்ரோவின் (23 சிக்சர்) சாதனையையும் சமன் செய்தார். தொடர்ந்து ஆடிய குயின்ஸ்லாந்து அணி 42.3 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி, 116 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மேலும் செய்திகள்