தெண்டுல்கரை முந்திய கோலி; ஒப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை: சச்சின் தெண்டுல்கர்
இந்திய கேப்டன் விராட் கோலி முன்னணி வீரர்களில் ஒருவர் என்றும் ஆனால் ஒப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
நவி மும்பை,
ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த அதிவேக வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை சமீபத்தில் இந்திய வீரர் கோலி முறியடித்து உள்ளார். ஒரு நாள் போட்டியில் அதிக சதங்களை (49) கடந்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையையும் கோலி நெருங்கி வருகிறார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக புனே நகரில் நடந்த போட்டியில் 38வது சதத்தினை கோஹ்லி நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில் சச்சின் தெண்டுல்கர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஒரு வீரராக விராட் கோலி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறார். அவரிடம் அந்த தீப்பொறியை எப்பொழுதும் நான் காண்கிறேன். உலகில் முன்னணி வீரர்களில் ஒருவராக அனைத்து காலங்களிலும் விராட் கோலி வருவார் என நான் எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
அதன்பின்னர் அவர், ஆனால் ஓப்பீடுகள் பற்றி பேசுவதற்கு நான் விரும்பவில்லை. கோலி கூறியது போன்று, கடந்த 24 வருடங்களாக நான் கூறி வருவது போன்று ஒப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என கூறினார்.
கடந்த 1960, 1970 மற்றும் 1980 ஆகிய காலகட்டங்களில் மற்றும் எனது காலகட்டங்களில் மற்றும் இன்றும் பல்வேறு பந்து வீச்சாளர்கள் விளையாடி கொண்டுள்ளனர். அதனால் அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.