அடிலெய்டு டெஸ்ட் : 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்துள்ளது.

Update: 2018-12-07 08:29 GMT
அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.  இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் புஜாராவின் சதத்தின் உதவியுடன் 250 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 3-வது பந்திலேயே இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஆரோன் பிஞ்ச் போல்டு ஆகி வெளியேறினார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் காவ்ஜாவும், மார்கஸ் ஹரிசும் மிகவும் கவனத்துடன் பேட் செய்தனர். 

இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அஷ்வின்,  மார்கஸ் ஹரிசை அவுட் ஆக்கினார்.  அடுத்து வந்த வீரர்களான ஷான் மார்ஷ் (2 ரன்கள்), ஹாண்ட்ஸ்கோம்ப் (34 ரன்கள்) டிம் பெய்ன் (5 ரன்கள்) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்துள்ளது.

டிராவிஸ் ஹெட் 61 ரன்களுடனும் மிட்செல் ஸ்டார்க் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.  ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட முதல் இன்னிங்சில் 59 ரன்கள் பின் தங்கியுள்ளது. 

மேலும் செய்திகள்