ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்காக சிறப்பாக தயாராகி வருகிறேன் சென்னையில் அம்பத்தி ராயுடு பேட்டி

ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகி வருகிறேன் என்று இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு கூறினார்.

Update: 2018-12-21 22:00 GMT

சென்னை, 

ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகி வருகிறேன் என்று இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு கூறினார்.

சென்னையில் அம்பத்தி ராயுடு

சென்னையில் நேற்று நடந்த ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான அம்பத்தி ராயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பேட்டிங்கில் குறிப்பிட்ட வரிசையில் தான் இறங்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் எதிர் பார்ப்பது கிடையாது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது என்பது சவாலானதாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு சிறப்பாக தயாராகுவதில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். அது தவிர வேறு எது பற்றியும் நான் சிந்திக்கவில்லை.

கடந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் என் மீது நம்பிக்கை வைத்து சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர். அந்த நம்பிக்கைக்கு உரிய பலனை அணிக்கு என்னால் திருப்ப செலுத்த முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஐ.பி.எல்,. சீசனில் நான் சிறப்பாக செயல்பட்டது திருப்பு முனையாக அமைந்தது. அது தான் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வழிவகுத்தது. ஆக்ரோ‌ஷமாக விளையாடுவதற்கும், ஆக்ரோ‌ஷம் கலந்த நம்பிக்கையுடன் ஆடுவதற்கும் முற்றிலும் வேறுபாடு உள்ளது.

ரஞ்சி போட்டியில் ஆடாதது ஏன்?

தற்போது எனக்கு 33 வயது ஆகிறது. ஏற்கனவே முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கிறேன். எனது உடல் தகுதியை கருத்தில் கொண்டு தான் ரஞ்சி உள்ளிட்ட 4 நாள் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகிறேன். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். பயிற்சி முக்கியம் என்பதை நான் உணர்ந்து தான் இருக்கிறேன். எந்த மாதிரியான போட்டியில் விளையாடினாலும் பயிற்சி மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு அம்பத்தி ராயுடு தெரிவித்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் மொகித் ‌ஷர்மா பேசுகையில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. வீட்டுக்கு திரும்புவது எப்பொழுதும் நல்லதாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து நான் அதிகம் சிந்திக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்