ரஞ்சி கிரிக்கெட்: டெல்லியை வெளியேற்றியது பெங்கால்

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் பெங்கால் – டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கொல்கத்தா ஈடன்கார்டனில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது.

Update: 2019-01-02 22:30 GMT

கொல்கத்தா,

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் பெங்கால் – டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கொல்கத்தா ஈடன்கார்டனில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே டெல்லி 240 ரன்களும், பெங்கால் 220 ரன்களும் எடுத்தன. 20 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 301 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 322 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

கடின இலக்கை நோக்கி கடைசி நாளான நேற்று 2–வது இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி 70.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது. அபிமன்யூ ஈஸ்வரன் 183 ரன்கள் விளாசி (211 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்) வெற்றிக்கு வித்திட்டார். 3–வது தோல்வியை தழுவிய டெல்லி அணி கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அதே சமயம் பெங்கால் அணி 22 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா) கால்இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

மேலும் செய்திகள்