ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் - யுவராஜ் சிங்

டி20உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது

Update: 2024-05-07 13:45 GMT

புதுடெல்லி,

20 அணிகள் கலந்துகொள்ள உள்ளடி20உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

ரோகித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவை. அழுத்தமான சூழ்நிலைகளின் போது தெளிவான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் ரோகித் சர்மா. 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை ரோகித் சர்மா அழைத்து சென்றார். அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவரைப் போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை. ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன். உலகக் கோப்பை பதக்கத்தை அவர் அணிய வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்.இவ்வாறு யுவராஜ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்