ஐ.பி.எல். இறுதி போட்டி; விதிகளை மீறிய பொல்லார்டுக்கு அபராதம் விதிப்பு

ஐ.பி.எல். இறுதி போட்டியில் நடுவர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-05-13 12:02 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்தது.  இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்சை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.  இதில், கடைசி ஓவரில் வெய்ன் பிராவோ பந்து வீசினார். அந்த ஓவரில் வைடு கொடுக்கவில்லை என்று பொல்லார்ட் பேட்டை தூக்கி எறிந்ததுடன், அடுத்த பந்து வீச வரும் போது பேட்டிங் செய்யாமல் கிரீசை விட்டு நகர்ந்தார்.

இந்த இரண்டு பந்துகளும் சரியானவையே என நடுவர் நிதீன் மேனன் கூறினார்.  இதைத்தொடர்ந்து நடுவர் பொல்லார்ட்டை எச்சரிக்கை செய்தார்.  கடைசி 2 பந்துகளை பொல்லார்ட் பவுண்டரிக்கு விரட்டினார்.

போட்டியில் ஐ.பி.எல். விதிகளை மீறி பொல்லார்டு நடந்து கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.  வீரர்கள் மற்றும் குழு அதிகாரிகளுக்கான ஐ.பி.எல்.லின் விதி 2.8ன்படி லெவல் 1 தவறை செய்தது பற்றி பொல்லார்டு ஒப்பு கொண்டுள்ளார்.

இந்த விதிமீறல்களுக்கு போட்டி நடுவர் எடுக்கும் முடிவே இறுதியானது.  இதன்படி, பொல்லார்டுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.  இந்த முடிவை பொல்லார்டு ஏற்று கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்