மான்செஸ்டர் ஓட்டலில் தகராறு செய்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
மான்செஸ்டர் ஓட்டலில் இருந்த ரசிகர்களுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
மான்செஸ்டர்,
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.
நடைபெற்ற 5 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக நேற்று ஆப்கானிஸ்தான் அணி, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷித் கான் 9 ஓவர்களுக்கு 110 ரன்களை வாரி வழங்கினார்.
150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மான்செஸ்டரில் நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் சென்றுள்ளனர். அப்போது ஹோட்டலில் இருந்த சிலர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிலரை புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்தவர்களுக்கும், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் ஆப்கானிஸ்தான் வீரர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.