இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2019-07-17 00:23 GMT
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், மானேஜர் சுனில் சுப்பிரமணியன் ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை போட்டியுடன் காலாவதியானது.

இந்திய அணி ஆகஸ்டு 3-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்காக தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர்கள், நிர்வாக மானேஜர் ஆகியோரின் பதவி காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. ஆனால் டிரெய்னர் சங்கர் பாசு, பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் பர்ஹர்ட் ஆகியோரின் ஒப்பந்த காலம் உலக கோப்பையுடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், டிரெய்னர், நிர்வாக மானேஜர் ஆகிய பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் recruitment@bcci.tv என்ற இ-மெயில் முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு குறைந்தபட்ச தகுதிகளை கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி நிர்ணயித்துள்ளது. இதன்படி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியின் தலைமை பயிற்சியாளராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். அல்லது உறுப்பு நாட்டு அணிகளின் தலைமை பயிற்சியாளராகவோ, ஐ.பி.எல். மற்றும் அதற்கு இணையான லீக் போட்டிக்கான அணியின் தலைமை பயிற்சியாளராகவோ, முதல் தர அல்லது தேசிய ‘ஏ’ அணியின் தலைமை பயிற்சியாளராகவோ குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இருந்து இருக்க வேண்டும். மேலும் குறைந்தது 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு மேற்கண்ட தகுதிகளில் ஒரே ஒரு மாற்றமாக குறைந்தது 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் பதவியில் இருப்பவர்கள் தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை. அவர்களின் பெயர்கள் தானாகவே பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, அரைஇறுதியில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. இந்த தோல்வி எதிரொலியாக இந்திய அணியில் பெரிய மாற்றம் வரலாம் என்று தெரிகிறது. இதில் சில பயிற்சியாளர்களின் பதவியும் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்