ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: பஞ்சாப் அணியில் நீடிப்பாரா அஸ்வின்?
ஐ.பி.ல். கிரிக்கெட் 2020 தொடரில்,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஆர்.அஸ்வின் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2019 ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி எதிர் அணிகளுக்கு சவாலாக இருந்தது. இந்த தொடரில் ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. ஐ.பி.எல். தொடரில் அஸ்வின் மொத்தம் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வழிநடத்திவந்த அஸ்வினை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், அது மட்டுமல்லாது அணியிலிருந்தும் நீக்க உள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது. மேலும் அடுத்த கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளிவந்து உள்ளது.
2017 ஐ.பி.எல். தொடரில் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினால் ரூ.7.6 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.