ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணியை வீழ்த்தியது கர்நாடகா

ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

Update: 2020-01-05 22:30 GMT
மும்பை, 

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மும்பை-கர்நாடகா இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) மும்பை பாந்த்ராவில் உள்ள பி.கே.சி. மைதானத்தில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 194 ரன்களும், கர்நாடகா 218 ரன்களும் எடுத்தன. 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 149 ரன்னில் சுருண்டது. சர்ப்ராஸ் கான் 71 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். பீல்டிங்கின் போது தோள்பட்டையில் காயமடைந்த மும்பை நட்சத்திர வீரர் பிரித்வி ஷா 2-வது இன்னிங்சில் ஆடவில்லை. கர்நாடகா இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரதீக் ஜெயின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 126 ரன்கள் இலக்கை கர்நாடக அணி 24.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேவ்தத் படிக்கல் அரைசதம் (50 ரன்) அடித்தார். 41 முறை சாம்பியனான பலம் வாய்ந்த மும்பை அணி இரண்டரை நாட்களிலேயே அடங்கிப்போனது உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மும்பை அணியை அவர்களது சொந்த ஊரிலேயே வீழ்த்தியது சிறப்பு வாய்ந்தது என்று கர்நாடகா கேப்டன் கருண் நாயர் கூறினார். ரஞ்சி வரலாற்றில் கர்நாடக அணியின் 200-வது வெற்றி இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய 2-வது அணி கர்நாடகா ஆகும். மும்பை அணி 245 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்த வகையில் டெல்லி 3-வது இடத்திலும் (188 வெற்றி), தமிழ்நாடு 4-வது இடத்திலும்(159 வெற்றி) உள்ளன.

மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ‘பிரித்வி ஷா உண்மையிலேயே 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் நல்ல நிலையில் இல்லை என்பதை பார்த்த போது தெரிந்தது. மதிய சாப்பாட்டின் போது தட்டை கூட அவரால் தூக்க இயலவில்லை. காயத்தன்மை மேலும் பெரிதாகி விடக்கூடாது என்று கருதி அவருக்கு 2-வது இன்னிங்சில் ஓய்வு அளித்து விட்டோம்’ என்றார்.

தமிழ்நாடு - உத்தரபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கான்பூரில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் நடக்கவில்லை. 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்த தமிழக அணி 3-வது நாளான நேற்று முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

தொடர்ந்து ஆடிய உத்தரபிரதேச அணி ஆட்ட நேர நிறைவில் 66 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 170 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. அதிகபட்சமாக முகமது சைப் 77 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் டி.நடராஜன் 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சே முடிவடையாததால் இந்த ஆட்டம் டிராவில் முடிவது ஏறக்குறையாக உறுதியாகி விட்டது. ஆனால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணிக்கு 3 புள்ளி கிடைக்கும் என்பதால் முன்னிலை பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற ஆட்டங்களில் புதுச்சேரி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மேகாலயாவையும், பரோடா 99 ரன்கள் வித்தியாசத்தில் ரெயில்வேயையும், பீகார் 6 விக்கெட் வித்தியாசத்தில் மிசோரத்தையும், சர்வீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 94 ரன்கள் வித்தியாசத்தில் மராட்டியத்தையும் தோற்கடித்தன.

மேலும் செய்திகள்