விளையாட்டு உலகின் உயரிய விருது வழங்கி சச்சினுக்கு கவுரவம்

விளையாட்டு உலகின் மிக உயரிய விருதான லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-18 03:15 GMT
பெர்லின்,

விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக லாரியஸ் விருது பார்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் வழங்கப்படும் இந்த விழாவில் 2019- ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.   2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் கார் பந்தய வீரர் ஹாமில்டோனுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு  அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. ஜெர்மனியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சச்சின் அதை பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக்  இந்த விருதை வழங்கினார்.


விருதை பெற்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், “ இது மிகவும் சிறப்பு மிக்கது. உலக கோப்பையை வென்ற போது இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மிகவும் அரிதாக ஒட்டு மொத்த நாடும் அந்த தருணத்தை கொண்டாடியது” என்றார். 

மேலும் செய்திகள்