இம்பேக்ட் வீரர் விதிமுறை சில விஷயங்களை நியாயமாக மாற்றியுள்ளது - ஸ்டார்க்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Update: 2024-05-04 10:04 GMT

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70, மணிஷ் பாண்டே 42 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா, நுவான் துஷாரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த மும்பை அணி திணறலாக பேட்டிங் செய்து 18.5 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

முன்னதாக ஐ.பி.எல். தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்பேக்ட் வீரர் விதிமுறை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் பவுலர்களுக்கு எதிராகவும் இருப்பதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இம்பேக்ட் வீரர் விதிமுறை ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா விமர்சித்தார்.

இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் ஒரு போட்டியில் இரு அணிகளுக்கும் நியாயமான வாய்ப்பு கிடைப்பதாக மிட்செல் ஸ்டார்க் பாராட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த விதிமுறையை வரவேற்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இம்பேக்ட் விதிமுறை சில விஷயங்களை நியாயமாக மாற்றியுள்ளது. அதனால் ஒவ்வொரு அணிக்கும் பிளேயிங் லெவனில் ஆழமான பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசை கிடைக்கிறது. இந்த விதிமுறையால் அதிக ஸ்கோர்கள் அடிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் அது பிட்ச்சின் தன்மை, மைதானத்தின் அளவு போன்றவற்றை பொறுத்தது. அதில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நியாயத்துடன் செயல்படுகிறது.

எனவே நல்ல பேட்டிங்கை கொண்டிருக்கும் நீங்கள் பெரிய ரன்கள் அடிப்பதற்கு இந்த விதிமுறை மட்டும் ஒரு பங்கை கொண்டிருக்கவில்லை. ஒரு மாதத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் அந்த விதிமுறை இருக்காது. எனவே அங்கே பெரிய ஸ்கோர்கள் பாதிக்கப்படுகிறதா என்பதை பார்ப்போம். அங்கே 11 வீரர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதால் கேப்டன்கள் கொஞ்சம் நுணுக்கமாக சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்