கே.எல். ராகுல் மிகவும் கோபக்காரர் - மயங்க் அகர்வால்

கே.எல் ராகுல் களத்தில் மிகவும் கோபம் அடைவார் என்று மயங்க் அகர்வால் கூறி உள்ளார்.

Update: 2020-04-26 11:47 GMT
பெங்களூரு,

இந்திய அணியில் ஒன்றாக விளையாடி வரும் கே.எல். ராகுல் - மயங்க் அகர்வால் இருவரும் உள்ளூர் அணியிலும் சேர்ந்து விளையாடியவர்கள். கர்நாடகா மாநில அணியில் ஒன்றாக ஆடிய அவர்கள் இந்திய அணியிலும் நண்பர்களாக வலம் வருகின்றனர். அதே போல, ஒரே ஐபிஎல் அணியிலும் இடம் பெற்றுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக இடம் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், லாக்டவுன் அமலில் உள்ளதால் இருவரும் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

சமீபத்தில் இருவரும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் முன்பு நேரலையில் உரையாடினர். அப்போது மயங்க் அகர்வால், ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் தான் சிக்ஸ் அடித்த போது அதே அணியை சேர்ந்த ராகுல் கடும் கோபம் அடைந்தாக குறிப்பிட்டார்.

மேலும், களத்தில் சாதாரணமாகவே கோபம் அடையும் கே.எல் ராகுல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆனால் என்ன செய்வார்? என கேள்வி எழுப்பினார்.  இந்த ஆண்டு உன்னை அணியின் கேப்டனாக சந்திக்க காத்திருக்கிறேன். களத்தில் சும்மாவே கோபம் வரும். இப்போது கேப்டனாக எப்படி நடந்து கொள்வாய் என தெரியவில்லை என தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த கேஎல் ராகுல், நீ களத்தில் ஏதாவது முட்டாள்தனமாக செய்தால் மட்டும் தான் நான் உன்னிடம் கோபப்படுவேன் என்றார். அப்போது மயங்க், நான் முகமது நபி பந்துவீச்சில் சிக்ஸ் அடித்தேன். அடுத்து என்ன திட்டம் என தெரிந்து கொள்ள உன்னிடம் வந்தேன். அப்போது நீ என்னை கடுமையாக திட்டினாய்? அது என்ன? என திருப்பி கேட்டார்.

அது முட்டாள்தனமான கிரிக்கெட். நீ சிக்ஸ் அடித்தது எனக்கு புரிந்தது. ஆனால், அது ரிஸ்க்கான ஷாட். நாம் 190 ரன்களை சேஸிங் செய்யவில்லை. 140 ரன்களை தான் சேஸிங் செய்தோம். அப்போது நாம் விக்கெட் இழக்கக் கூடாது என நான் நினைத்தேன் இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.

மேலும் செய்திகள்