கிரிக்கெட் வாரியம் நடத்திய சோதனையில் குளறுபடியா? ‘எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை’ பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக வருகிற 28-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது.

Update: 2020-06-24 22:36 GMT
லாகூர், 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக வருகிற 28-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

இதில் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி பேட்ஸ்மேன் பஹார் ஜமான் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆல்-ரவுண்டரான 39 வயதான முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக லாகூரில் உள்ள மற்றொரு தனியாார் ஆஸ்பத்திரியில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் ஹபீசுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது.

 இதே போல் அவரது குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனை சரியானது தானா? என்ற குழப்பம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எது எப்படி என்றாலும் இன்று அனைத்து வீரர்களுக்கும் மறுபடியும் கொரோனா சோதனை நடத்தப்பட இருக்கிறது.

மேலும் செய்திகள்