இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் : நெஹ்ரா

இந்தியாவுக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடி விட்டார் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-02 08:49 GMT

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி. கடந்த உலக கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் டோனி விளையாடவில்லை. இதனால், அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா? என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழும் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.  

விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டோனி நிச்சயம் பங்கேற்பார் என்ற போதிலும், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து விளையாடுவாரா? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. டோனியும் இது பற்றி வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் டோனியின் தலைமையின் கீழ் விளையாடியவருமான ஆஷிஸ் நெஹ்ரா,  இந்திய அணிக்காக டோனி இனி விளையாட மாட்டார் என்று தான் நினைப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது,  இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியில் டோனி ஏற்கனவே விளையாடிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்  ஊடகங்கள் தான் தொடர்ந்து இது பற்றி விவாதித்து கொண்டிருக்கின்றன.

டோனியின் மனதில் என்ன இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.  வரும் ஐபிஎல் போட்டியில் டோனி விளையாடுவதற்கும் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன். டோனி விளையாட தயாராக இருந்தால், கேப்டனோ பயிற்சியாளரோ, தேர்வுக்குழுவினரோ யாராக இருந்தாலும் டோனியை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள்” என்றார். 

மேலும் செய்திகள்