‘கோலியை நான் ஏன் பாராட்டக்கூடாது?’ - அக்தர்

‘நான் ஏன் இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் பாராட்டக்கூடாது? என்று சோயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-09-04 00:29 GMT
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் ஆட்டத்திறனையும், சாதனைகளையும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அவ்வப்போது பாராட்டுவது உண்டு. இதனால் அவரை அந்த நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

இது குறித்து அக்தரிடம் கேட்கப்பட்ட போது, ‘நான் ஏன் இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் பாராட்டக்கூடாது? விராட் கோலியின் சாதனைகளை நெருங்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியிலும் ஏன் உலக அளவிலும் தற்போது எந்த வீரராவது உள்ளனரா? மக்கள் ஏன் கோபமடைகிறார்கள் என்பது தெரியவில்லை. என்னை விமர்சிக்கும் முன்பு முதலில் கோலியின் சாதனைகளை பார்க்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்து உள்ளார்.

இந்திய அணிக்காக எத்தனை தொடர்களை வென்று கொடுத்துள்ளார் என்பதை பாருங்கள். உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். கோலி ஒரு இந்தியர் என்பதால் அவரை புகழ்ந்து பேசக்கூடாது என்ற வெறுப்பை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். கோலியும், ரோகித்தும் எல்லா நேரமும் சிறப்பாக ஆடுகிறார்கள். பிறகு ஏன் அவர்களை நான் பாராட்டக்கூடாது’ என்றார்.

மேலும் செய்திகள்