கடைசி இரு டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிப்பு - உமேஷ் யாதவ் சேர்ப்பு

கடைசி இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

Update: 2021-02-18 00:27 GMT
புதுடெல்லி, 

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இ்ந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக வருகிற 24-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் ஆமதாபாத்திலேயே (மார்ச்4-8) நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

18 பேர் கொண்ட அணியில் 17 பேர் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர், விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக விடுவிக்கப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் போது பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் தாயகம் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. இதில் அவர் தேறினால் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அணியில் இணைவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு இன்னும் 100 சதவீத உடல்தகுதியை எட்டாததால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, அஜிங்யா ரஹானே, லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட், விருத்திமான் சஹா, அஸ்வின், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

மேலும் செய்திகள்