காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!
தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் திருமணம் ஆக்ராவில் பிரமாண்டமான முறையில் நேற்று நடந்தது.;
Image Courtesy : Instagram Deepak Chahar
ஆக்ரா,
ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர். ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்டதால் பின்னர் இந்திய அணிக்கு தேர்வானார்.
இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் ஒரு போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவிக்க இவர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் தீபக் - ஜெயா ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் திருமணம் ஆக்ராவில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் நடந்தது, இதில் ராகுல் சாஹர், மற்ற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தோனி, விராட் கோலி, மற்றும் இந்திய அணியின் பிற வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.