டி20 உலகக்கோப்பை அணியில் அவருக்கு இடம் கொடுக்கக்கூடாது - இர்பான் பதான்

ராயுடு சி.எஸ்.கே வீரர் என்பதால் மூத்த வீரரை சேர்த்து டாடி ஆர்மியை உருவாக்க நினைக்கலாம். ஆனால் இது இந்திய அணி.

Update: 2024-04-17 02:20 GMT

கோப்புப்படம் 

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இதுவரை அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஜித்தேஷ் சர்மா, துருவ் ஜூரெல் ஆகியோர் போட்டியிட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.

கடந்த இரு ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கை அவரது அதிரடி ஆட்டத்திற்காக மட்டுமின்றி அவரது அனுபவத்திற்காகவும் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் எடுக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தோனிக்கு நிகராக பினிஷிங் செய்யும் திறமையை கொண்ட தினேஷ் கார்த்திக்கிற்கு கடைசி முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று ராயுடு கூறியுள்ளார். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் 2024 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படக்கூடாது என ராயுடுவுக்கு முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தினேஷ் கார்த்திக்கை நான் கண்டிப்பாக பாராட்டுவேன். அவர் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். ஆனால் இந்திய அணி மிகவும் வித்தியாசமானது. உலகக்கோப்பை வித்தியாசமான லெவலில் நடக்கும். அங்கே ஐ.பி.எல் போல உங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் இருக்க மாட்டார்கள்.

உலகக் கோப்பையில் இம்பேக்ட் வீரர் விதிமுறையும் இருக்காது. 11 பேர் மட்டுமே விளையாடுவார்கள். எனவே அங்கே பேட்டிங் செய்வது வித்தியாசமான அழுத்தத்தை கொடுக்கும். பும்ரா போன்ற பவுலர்களை எதிர்கொள்வதற்கும் மற்றவர்களை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது. அறிமுக பவுலர்களுக்கும் அனுபவ பவுலர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.

தோனியை போன்ற சாயல் அவரிடம் உள்ளதாக நீங்கள் சொன்னீர்கள். ஆனால் தோனி இல்லாத போது ரிஷப் பண்ட் பார்மில் இல்லை என்றால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்வேன். கார்த்தி-க்கு பதிலாக நான் சஞ்சு சாம்சனை கருத்தில் கொள்வேன். மற்றொரு வீரர் பார்மில் இருக்கிறார் என்பதற்காக தற்போதுள்ள வீரர்களை நாம் கழற்றி விட முடியாது. ராயுடு சி.எஸ்.கே வீரர் என்பதால் மூத்த வீரரை சேர்த்து டாடி ஆர்மியை உருவாக்க நினைக்கலாம். ஆனால் இது இந்திய அணி. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்