10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தர்மசாலாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டி..!!

10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தர்மசாலாவில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுகிறது.

Update: 2023-05-17 04:35 GMT

தர்மசாலா,

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கான ரேசில் 7 அணிகள் இருக்கின்றன.

இந்நிலையில் தர்மசாலாவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 19,000 பார்வையாளர்கள் கொண்ட தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏற்பாடுகளை இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகம் சிறப்பாக முடித்துள்ளது. இந்த சீசனின் 64வது மற்றும் 66வது ஐ.பி.எல். போட்டிகளை காண மைதானம் தயாராக உள்ளது. தரையைச் சுற்றி ஹார்டிங் மற்றும் எல்இடிகள் நிறுவப்பட்டுள்ளன. மைதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடைசியாக 2013ஆம் ஆண்டு இங்கு ஐ.பி.எல். போட்டிகள் நடந்தன. மைதானம் தொடர்பாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சில், மாநில அரசு இடையே சட்டப்போராட்டம் நடந்து வந்ததால் இங்கு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் உள்ளது. அத்துடன் அந்த அணி ரன்-ரேட்டிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த டெல்லி அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டு எழுச்சி பெற்றது. ஆனால் அதன் பிறகு கடந்த 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.

ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் பஞ்சாப்பும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்