ஜேசன் ராய் சதம்: வங்கதேச அணிக்கு 327 ரன் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து...!

இங்கிலாந்து அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் சதம் அடித்து அசத்தினார்.

Update: 2023-03-03 10:03 GMT

Image Courtesy: AFP 

டாக்கா,

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் இறங்கினர். இதில் சால்ட் 7 ரன், அடுத்து வந்த டேவிட் மலான் 11 ரன், ஜேம்ஸ் வின்ஸ் 5 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதையடுத்து ராயுடன் கேப்டன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் சதமும், பட்லர் அரைசதமும் அடித்த நிலையில் ராய் 132 ரன்னிலும், பட்லர் 76 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் சிறுது நேரம் அதிரடி காட்டிய மொயீன் அலி 42 ரன்னும், சாம் கர்ரண் 33 ரன்னும் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஜேசன் ராய் 132 ரன், பட்லர் 76 ரன், மொயீன் அலி 42 ரன், சாம் கர்ரண் 33 ரன் எடுத்தனர்.

வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெகதி ஹசன் மிராஸ் 2 விக்கேடும், ஷகிப் அல் ஹசன், தைஜூல் இஸ்லாம் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த போட்டியில் 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்