அந்த இளம் இந்திய வீரரால் மட்டுமே 400 ரன்கள் சாதனையை முறியடிக்க முடியும் - லாரா நம்பிக்கை

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் லாரா ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் குவித்ததே டெஸ்டில் தனிநபர் அதிகபட்ச உலக சாதனையாக உள்ளது.

Update: 2024-05-08 22:30 GMT

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னாள் வீரர் பிரையன் லாரா மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், மெக்ராத், போன்ற உலகின் அனைத்து தரமான டாப் பவுலர்களுக்கு சவாலை கொடுத்த பெருமைக்குரியவர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக அவர் படைத்த உலக சாதனை யாராலும் உடைக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் வீரேந்திர சேவாக், ஜெயசூர்யா, ஹெய்டன் போன்றவர்கள் தமது 400 ரன்கள் சாதனையை உடைப்பதற்காக நெருங்கி வந்ததாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை உடைக்கப்படாமல் இருக்கும் அந்த சாதனையை இளம் இந்திய வீரரான ஜெய்ஸ்வால் முறியடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

டெஸ்ட் போட்டியில் நான் படைத்து இருக்கும் சாதனைக்கு (ஒரு இன்னிங்சில் 400 ரன் குவிப்பு) அச்சுறுத்தல் இருப்பதாக உணருகிறேன். எனது டெஸ்ட் சாதனையை ஜெய்ஸ்வால் தகர்க்க நல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கான திறன் அவரிடம் இருக்கிறது. தற்போதுள்ள வீரர்கள் வேகத்துடன் பேட்டிங் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் 300-க்கும் ரன்களை அடித்த வீரர்களை பாருங்கள். அது கிறிஸ் கெயில், சேவாக், ஜெயசூர்யா, ஹெய்டன். அதுபோன்ற வீரர்கள் பவுலிங் அட்டாக்கை அடித்து நொறுக்கக் கூடியவர்கள்.

ராகுல் டிராவிட் அல்லது ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் அதை செய்வார்கள் என்று உங்களால் சொல்ல முடியாது. எனவே வேகமாக பேட்டிங் செய்யும் வீரருக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. ஜெய்ஸ்வால் அது போன்ற வீரர். டேவிட் வார்னர் அதை நெருங்கியபோது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அவர் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய வீரர். அதிரடியாக ஆடும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களால்தான் எனது சாதனையை தகர்க்க முடியும். ஏதாவது ஒரு கட்டத்தில் எனது சாதனை உடைந்து விடும் என்று நினைக்கிறேன். எல்லாம் சரியாக அமைந்தால் அது நடக்கும். அந்த நேரத்தை எதிர்நோக்குகிறேன். அது நடக்கும் என்று நம்புகிறேன்'" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்