ஐ.பி.எல். ஏலம்: இந்த 5 வீரர்களை வாங்க கடும் போட்டி இருக்கும் - இர்பான் பதான்
ஐ.பி.எல். மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது.;
மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
இந்த ஏலம் குறித்தும், ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போக வாய்ப்புள்ள வீரர்கள் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்த ஏலத்தில் குறிப்பிட்ட 5 வீரர்களை வாங்க அணிகளுக்கிடையே கடும் போட்டி இருக்கும் என்று தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கணிப்பின் படி, ஆகாஷ் தீப், ஆகாஷ் மத்வால், கேமரூன் கிரீன், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் மதீஷா பதிரனா ஆகிய 5 வீரர்களை வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறியுள்ளார்.