சி.எஸ்.கே. அணியில் அம்பத்தி ராயுடு இடத்தில் ஆடப் போவது இந்த வீரர்தான்- மைக் ஹஸ்சி தகவல்

அம்பத்தி ராயுடு கடந்த சீசனுடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.

Update: 2024-03-18 15:26 GMT

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இரவு 8 மணியளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு இடத்தில் பேட்டிங் செய்யப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சி.எஸ்.கே. அணியில் கடந்த ஆறு வருடங்களாக இடம் பெற்று வந்த அம்பத்தி ராயுடு நான்காவது அல்லது ஐந்தாவது வரிசையில் பேட்டிங் இறங்கி வந்தார். பல போட்டிகளை அவரது பேட்டிங்கால் வென்று கொடுத்து இருக்கிறார். கடந்த சீசனுடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்றார்.

இதனிடையே சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி அளித்த பேட்டி ஒன்றில், அம்பதி ராயுடு இடத்தில் சமீர் ரிஸ்வி விளையாட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மைக் ஹஸ்சி பேசுகையில்,

"நிச்சயமாக அவரால் (சமீர் ரிஸ்வி) அந்த இடத்தில் பேட்டிங் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். அம்பத்தி ராயுடு அதிக அனுபவம் உள்ளவர், அவர் நீண்ட காலம் விளையாடியவர். அவர் ஒரு அனுபவமிக்க ஆட்டக்காரர், அதேசமயம் ரிஸ்வி தனது ஐ.பி.எல். வாழ்க்கையை இப்போதுதான் தொடங்குகிறார். ராயுடு இத்தனை ஆண்டுகளாக செய்து வந்ததை ரிஸ்வி சரியாகச் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், நிச்சயமாக, நாம் அவரை வளர்க்கத் தொடங்கலாம், மேலும் அவருக்கு நிறைய இயல்பான திறன் உள்ளது. எனவே, அவருடன் சேர்ந்து செயல்பட உற்சாகமாக இருக்கிறது. அவர் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது," என்று கூறினார்.

சமீர் ரிஸ்வியை கடந்த வருடம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் ரூ. 8.40 கோடி கொடுத்து சி.எஸ்.கே. வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்