சாம்சன், ஜூரெல் அரைசதம்...லக்னோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான்

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்னும், துருவ் ஜூரெல் 52 ரன்னும் எடுத்தனர்.

Update: 2024-04-27 17:45 GMT

Image Courtesy: AFP 

லக்னோ,

ஐ.பி.எல் தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 76 ரன், தீபக் ஹூடா 50 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பட்லர் 34 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் பராக் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்னும், துருவ் ஜூரெல் 52 ரன்னும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்