டி20 உலகக்கோப்பை: பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்பதற்காக அவரை தேர்வு செய்ய மறந்து விடக்கூடாது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

Update: 2024-04-20 03:14 GMT

image courtesy: PTI

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இதில் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் 2024 ஐ.பி.எல். தொடரில் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. குறிப்பாக கடந்த வருடம் குஜராத்துக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து 14 போட்டிகளில் 474 ரன்கள் குவித்ததால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிங்கு சிங் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் சிறந்த பினிஷராக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினார்.

ஆனால் நடப்பு சீசனில் கொல்கத்தா அணியில் சுனில் நரைன் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்து வருகின்றனர். அதனால் பெரியளவில் வாய்ப்பு பெறாத ரிங்கு சிங் 6 போட்டியில் 83 ரன்களை மட்டுமே 162.75 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

இந்நிலையில் பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்பதற்காக ரிங்கு சிங்கை உலகக் கோப்பையில் தேர்வு செய்ய மறந்து விடக்கூடாது என சஞ்சய் மஞ்ரேக்கர் தேர்வுக்குழுவை கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"அவருக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே ரிங்கு சிங்கை தேர்வுக் குழுவினர் மறந்து விட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் நேரடியாக இந்திய அணிக்குள் வருவதற்கு தகுதியானவர். ஏனெனில் தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர் எந்தளவுக்கு தொடர்ந்து நன்றாக விளையாடினார் என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

இந்திய அணியில் எவ்வளவு பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அவர் முக்கிய வீரராக இருப்பதை நான் விரும்புகிறேன். அதே போல நீண்ட காலமாக தடுமாறிய சஞ்சு சாம்சன் ஒரு வழியாக நம்முடைய எதிர்பார்ப்புக்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளார். நல்ல முதிர்ச்சியுடன் தொடர்ந்து அசத்தும் அவரைப் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர் இந்திய டி20 அணிக்கு அவசியம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்