இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை மறுத்ததற்கான காரணம் இதுதான் - ரிக்கி பாண்டிங்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட பி.சி.சி.ஐ. தம்மை அழைத்ததாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-23 10:28 GMT

புதுடெல்லி,

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. இப்போதே தொடங்கி உள்ளது. இதற்காக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், ஸ்டீபன் பிளெமிங், விவிஎஸ் லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர், ஆசிஸ் நெஹ்ரா போன்ற முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட பி.சி.சி.ஐ. தம்மையும் அழைத்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐபிஎல்-ல் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருப்பதாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாலும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக பாண்டிங் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"அது பற்றி (தலைமை பயிற்சியாளர்) நிறைய செய்திகள் வெளிவந்ததை நான் பார்த்தேன். பொதுவாக இது போன்ற செய்திகள் உங்களுக்கு தெரிவதற்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் வந்து விடும். இருப்பினும் ஐபிஎல் தொடரின்போது அது பற்றி என்னிடம் நேருக்கு நேராக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக அந்த பதவியில் செயல்பட விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது. ஒரு தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பதை நான் விரும்புகிறேன். இருப்பினும் என்னுடைய வாழ்க்கையில் கூடுதலாக சில அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக வீட்டில் கொஞ்சம் நேரத்தை செலவிட விரும்புகிறேன்.

இந்திய அணியுடன் வேலை செய்ய வேண்டிய நிலைமை வந்தால் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். அத்துடன் தேசிய அணிக்கு ஒரு வருடத்தில் 10 முதல் 11 மாதங்கள் வரை வேலை செய்ய வேண்டும். எனவே அது என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு பொருந்தாது. இந்த நேரத்தில் ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளமிங் ஆகியோருடைய பெயர்களும் அந்த பட்டியலில் இருப்பதாக நான் பார்த்தேன். கவுதம் கம்பீரின் பெயரும் கடந்த சில நாட்களாக வலம் வருகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக ஏற்கனவே சொன்ன காரணத்தால் என்னால் அந்த வேலையை ஏற்க முடியவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்