உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

Update: 2023-05-26 09:12 GMT

Image Courtesy: @ICC

துபாய்,

2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி இங்கிலாந்தில் உள்ள லணடன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜூன் 12ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதுகின்றன. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்த இந்திய அணி இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் களம் இறங்குகிறது.

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை அளிக்கப்படும் என்ற விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு $1.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு $8,00,000 பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புள்ளி பட்டியலில் 3வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்க அணிக்கு $4,50,000 அமெரிக்க டாலும், 4வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு $3,50,000 அமெரிக்க டாலரும், 5வது இடம் பிடித்த இலங்கை அணிக்கு $ 2,00,000 அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6வது இடம் பிடித்த நியூசிலாந்து, 7வது இடம் பிடித்த பாகிஸ்தான், 8வது இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ், 9வது இடம் பிடித்த வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு தலா $1,00,000 அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் $3.8 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்