கால்பந்து ஜாம்பவான் மாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம்

பிரபல கால்பந்து ஜாம்பவான் டீகோ மாரடோனாவின் உடல் அர்ஜென்டினாவில் பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2020-11-28 09:02 GMT
பியூனஸ் அயர்ஸ்,

கால்பந்து அரங்கின் சகாப்தமாக திகழ்ந்த அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் டியாகோ மரடோனா கடந்த 26-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு ஆபரேஷன் செய்து வீடு திரும்பிய 2 வாரத்திற்குள் அவரது இல்லத்தில் வைத்து உயிர் பிரிந்தது.

அர்ஜென்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவின் மறைவையொட்டி அந்த நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்பட்டது. தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சவப்பெட்டியை சுற்றி அர்ஜென்டினா தேசிய கொடியும், அவர் அணிந்த எண்10 பொறிக்கப்பட்ட சீருடையும் போர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இறுதிச்சடங்குகளுக்குப் பின், அர்ஜென்டினா தேசியக் கொடி போர்த்திய மாரடோனா உடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பியுனஸ் ஏர்ஸ் சாலையில் இருபக்கங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கால்பந்து ஜாம்பவானுக்கு பிரியா விடை அளித்தனர்.  புறநகர் பகுதியில் பெல்லா விஸ்டா கல்லறையில், அவரது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மாரடோனா  மாரடோனாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  மாரடோனா முதல் மனைவி கிளாடியா, மகள்கள் தல்மா 33, கியானினா 31, மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்