ஆசிய கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

ஆசிய கைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Update: 2019-09-14 00:03 GMT
தெக்ரான்,

20-வது ஆசிய சீனியர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரானில் உள்ள தெக்ரானில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஓமன், சீனா, கஜகஸ்தான் ஆகியவை அந்த பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளாகும். லீக் ஆட்டம் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். நேற்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 5 செட் வரை நீடித்தது. முடிவில் இந்திய அணி 31-29, 25-14, 28-30, 18-25, 15-9 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டிக்கு தகுதி பெறும்.

மேலும் செய்திகள்