டிரோல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – ராஷ்மிகா மந்தனா
சிலர் பணத்திற்காகவே பொய்யான பிரசாரங்களை செய்கிறார்கள் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திரை உலக பிரபலங்களை சமூக வலைதளங்களில் ‘டிரோல்’ செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக முன்னணி கதாநாயகிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், “என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் வரும்போது, நண்பர்கள் ‘நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை?’ என்று கேட்கிறார்கள். டிரோல் செய்பவர்களுக்கு பதில் சொல்வதால் எந்த பயனும் இல்லை. பொய்களைப் பரப்புவோர் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள்.
பொய்யான வதந்திகளைப் பார்த்து, ‘இது உண்மையில்லை’ என்று நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? வதந்திகளை பரப்புவோருக்கு பதிலளித்தால், அவர்களை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும். அதை நான் ஏன் செய்ய வேண்டும்?” என்று கூறினார்.
மேலும், “சிலர் பணத்திற்காகவே பொய்யான பிரசாரங்களை செய்கிறார்கள். நான் பணம் சம்பாதிப்பதற்காக நடிக்கிறேன். சினிமாவிற்கு வந்தபோது எப்படி இருந்தேனோ, அதேபோல தான் இன்றும் இருக்கிறேன். முகம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என ராஷ்மிகா தெரிவித்தார்.