“பரியேறும் பெருமாள்” பட வாய்ப்பை தவறவிட்டதற்கு மிகவும் வருத்தப்பட்டேன் - நடிகை அனுபமா
நடிகை அனுபமா ‘பரதா’ பட புரமோஷன் நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்தார்.;
‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் 'கொடி' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், 'கார்த்திகேயா - 2' , '18 பேஜஸ்', 'டில்லு ஸ்கொயர்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தின் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘பரதா’. இந்தப் படத்தை பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அனுபமா புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.இப்படம் வருகிற 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிராமங்களில் பெண்கள் பரதா அணிவது, அவர்களை அடிமைகளாக சித்திரிக்க ஆண்கள் கொண்டுவந்த வழக்கம் என்று கூறப்படுகிறது. ‘பரதா’ படத்திலும் பரதா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு கதை நகர்கிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அனுபமா அவர் நடித்து முடித்துள்ள ‘பைசன்’ திரைப்படத்தை பற்றி சில விஷயங்களை கூறினார். “ இயக்குநர் மாரி சார் முதலில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடிக்க அழைத்தார் அப்போது நான் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்ததால் டேட் இல்லாததால் என்னால் நடிக்க முடியவில்லை, அந்த முடிவை எண்ணி நான் அதிகம் வருத்தப்பட்டுள்ளேன். அதன் பிறகு ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடிக்க அழைத்தார் அப்போதும் என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் ‘பைசன்’ திரைப்படத்தில் நடிக்க அழைத்தார் இம்முறை இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என இப்படத்தில் நடித்தேன். இப்படம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது” என கூறியுள்ளார்.