நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 70 பேருக்கு ராஜ்யோத்சவா விருது கர்நாடக அரசு வழங்குகிறது

கர்நாடகம் உதயமான நாளையொட்டி நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட 70 பேருக்கு ராஜ்யோத்சவா விருதுகளை கர்நாடக அரசு வழங்க இருக்கிறது.;

Update:2025-11-01 00:08 IST

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ந்தேதி கர்நாடகம் உதயமான நாளையொட்டி ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கர்நாடக அரசு தேர்வு செய்து ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 70 சாதனையாளர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இலக்கியத்துறையில் 6 பேருக்கும், நாட்டுப்புற கலையில் 8 பேருக்கும், இசைத்துறையில் 2 பேருக்கும், திரைத்துறையில் தட்சிண கன்னடாவை சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், குடகு மாவட்டத்தை சேர்ந்த நடிகை விஜயலட்சுமி சிங் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.

நிர்வாகத்துறையில் ராமநகரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தையா, மருத்துவத்துறையில் டாக்டர்கள் ஆலம்மா மாரண்ணா, ஜெயரங்கநாத் ஆகியோருக்கும் இந்த விருது இன்று வழங்கப்பட உள்ளது.

சமூக சேவை துறையில் சூலகித்தி ஈரம்மா உள்பட 5 பேருக்கும், பலதுறைகள் பிரிவில் 8 பேருக்கும், வெளிமாநில, வெளிநாட்டு வாழ் கன்னடர்கள் பிரிவில் 2 பேருக்கும், சுற்றுச்சூழல் பிரிவில் 2 பேருக்கும், விவசாயத்துறையில் 2 பேருக்கும், ஊடக பிரிவில் 4 பேருக்கும், அறிவியல்-தொழில்நுட்ப பிரிவில் 3 பேருக்கும், கூட்டுறவுத்துறையில் ஒருவருக்கும், யக்‌ஷகானா பிரிவில் 3 பேருக்கும் வழங்கப்படும். பயலாட நாட்டுப்புற கலை பிரிவில் ஒருவருக்கும், நாடகப் பிரிவில் 5 பேருக்கும், கல்வித்துறையில் 4 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும், நீதித்துறை பிரிவில் பாகல்கோட்டையை சேர்ந்த நீதிபதி பஜந்திரிக்கும், சிற்பக்கலை பிரிவில் 2 பேருக்கும், ஓவிய கலை பிரிவில் ஒருவருக்கும், கைவினை பொருட்கள் பிரிவில் ஒருவருக்கும் ராஜ்யோத்சவா விருது வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ராஜ்யோத்சவா விருது பெறும் அனைவருக்கும் தலா ₹5 லட்சம் வெகுமதியும், தலா 25 கிராம் தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்